ஞாயிறு, 10 மார்ச், 2013

மோடி


21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது: மோடி பெருமித உரை:


மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை காலை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாடுவாழ் பாஜக நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொளிக் காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸிங்) முறையில் மக்களிடையே உரை நிகழ்த்தினார். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி, சிகாகோ நகரங்களில் பெருவாரியான மக்கள் இந்த உரையை பொதுவில் குழுமியிருந்து கேட்டனர். இந்த நிகழ்ச்சி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் பல்வேறு நகரங்களில் ஒளிபரப்பப் பட்டது. இந்தியாவிலும் பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த உரையை நேரடியாக ஒளிபரப்பின.
நரேந்திர மோடியின் பேச்சை பெருவாரியான மக்கள் கேட்டு ரசித்தனர். அவரது உரை, இந்திய தேசிய உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் விதத்தில் அமைந்திருந்தது.
அவரது பேச்சில், "வளர்ச்சியே அனைத்துவித பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்” என்றார். "ஏக் பாரத், ச்ரேஷ்ட பாரத்’ (ஒரே பாரதம்; மிகச்சிறப்பான பாரதம்) என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்த மந்திரத்தை முன்னிறுத்தி நாம் முன்னேறினால், நாடு சிறப்பாகும் என்று கூறிய அவர், மதச்சார்பின்மை என்பது, "நாடே முதன்மையானது” என்ற எண்ணமே என்றார்.
நாம் எதைச் செய்தாலும் அது கட்டாயமாக இந்தியாவுக்காகவே இருக்க வேண்டும். இந்தியா, அதன் மதிப்பு, மக்களின் கனவு ஆகியவை சிதைவதற்கு நாம் விடக்கூடாது; இந்தியாவே எதிலும் முதன்மையானதாக இருக்க வேண்டும்” என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கியதற்காக வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் அமைப்புக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட நரேந்திர மோடி, இந்தியாவுடன் அவர்கள் வைத்திருக்கும் நல்ல தொடர்பைப் பாராட்டி நன்றி கூறினார். "நாம் எங்கே வாழ்ந்தாலும், நமது பிணைப்பானது, நமது வேர்களையும், நமது கலாசாரத்தையும், நமது பண்பாட்டையும் சார்ந்ததாக இருப்பதைத் தக்கவைக்க வேண்டும்... பாரதத்தின் மீதான அன்பும், பாரதத்தின் மீதான பக்தியும் ஆண்டுகள் பல கழிந்தாலும் அது வளர்ந்துகொண்டே செல்ல வேண்டும்” என்றார் மோடி.
இந்தியாவுக்கு உதவவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற அனைத்து விதத்திலும் செயலாற்றவும் வெளிநாடு வாழ் நண்பர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் பிறந்த இந்திய வாரிசுகள், இதற்கு முன் இந்தியாவுக்கு வந்து பார்த்திராத அந்த இளைஞர்கள் இந்தியாவுக்கு வந்து பார்த்து, இயன்ற சமுதாய சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; அதுவே ஒரு சாதகமான அம்சமாக அமையும் என்றார் மோடி.
கடந்த 3 தலைமுறையாக ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது என்று கூறிய மோடி, 21ம் நூற்றாண்டில் உலகை வழிநடத்தப் போவது யார் என்பதே அந்தக் கேள்வி; 19ம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்கானதாக இருந்தது. நாம் அந்தக் காலகட்டத்தில் காலனி ஆதிக்கத்தில் இருந்துவிட்டோம். எனவே அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த இயந்திரப் புரட்சி யுகத்தால் நாம் பெரிதும் பயனடையவில்லை. நாம் அப்போது காலனி ஆதிக்கத்துக்கு உட்படாமல் இருந்திருந்தால் நிகழ்வுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். நமக்கு தகுதிகளும் திறமைகளும் இருந்தன. ஆனால், காலனி ஆதிக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால், வாய்ப்புகள் நம் கையை விட்டுப் போய்விட்டன. 20ம் நூற்றாண்டு அமெரிக்காவின் யுகமாக இருந்துவிட்டது. அமெரிக்காவின் தாக்கம் உலகில் அதிகமாக இருந்தாலும், நாம் நம் சுய முயற்சியில், மகாத்மா காந்தியின் தலைமையில் போராடி நம் சுதந்திரத்தைப் பெற்றோம். சென்ற நூற்றாண்டிலேயே, அடுத்து வரும் நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நம் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அரசு அமைந்தபோது, உலக நாடுகள் நம்மைப் பார்த்து, இந்தியா நிச்சயமாக ஏதாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையை முன்வைத்தார்கள். வாஜ்பாய் அணுகுண்டு சோதனையை நடத்தி சுயசார்பை வெளிப்படுத்தியபோது, இந்தியாவிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் நம்பிக்கை மேலும் துளிர்விட்டது. இத்தகைய நிலையில், இந்தியாவின் கைகளில் உலகத்தினை வழிநடத்தும் பொறுப்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றம்... கடந்த 6-7 வருடங்களாக அப்படி ஏதும் நடக்கவில்லை! - என்ற தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் நரேந்திர மோடி.
குஜராத்தின் வளர்ச்சி குறித்து தனது கருத்தை வெளியிட்ட மோடி,
குஜராத் புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கு விதைத்துள்ளது. இருண்ட சூழ்நிலைக்கு நடுவே, புதிய வகை நம்பிக்கை ஒளிக்கீற்றை அது அளித்துள்ளது. எனவே இயல்பாக அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொருளாதாரத் தேக்கநிலை, மந்தநிலை என்றெல்லாம் இரு முறை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தித்து பாதிப்படைந்தபோது, குஜராத் பல்வேறு முன்னெடுப்புகளை வைத்து வளர்ச்சியின் பாதையில் தடையின்றிச் சென்றது என்றார் மோடி. மேலும், தற்போது உற்பத்தித் துறை சிறந்ததாகவும், மலிவான விலையிலானதாகவும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டியது கட்டாயம் என்றார்.
2012ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறவில்லை; குஜராத் மக்கள் வளர்ச்சிக்கான பாதைக்கு தங்களுக்குத் தாங்களே கொடுத்த வெற்றி அது என்று குறிப்பிட்ட மோடி, எத்தகைய பின்னோக்குத் தன்மைகள் முன்வைக்கப்பட்ட போதும், வளர்ச்சிக்கே முதன்மை தருவோம் என்ற குஜராத் மக்களின் உறுதியும் நம்பிக்கையுமே அதன் வெற்றி என்றார்.
தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ... அதுவல்ல நம் இலக்கு. ஐந்து வருடத்துக்கு நமக்கு ஆட்சிக்கான பொறுப்பை மக்கள் அளித்தார்கள் என்றால், தன்னலமற்ற சேவையினை மக்களுக்குச் செய்வதற்கான அதிகாரத்தைத்தான் அவர்கள் அளித்துள்ளார்கள், அதைச் செய்ய வேண்டும். இந்தக் கடமையை நாம் செவ்வனே செய்துவந்தால், நமது சிறு சிறு குறைகளை மக்கள் பொறுத்துக் கொண்டு மன்னித்து விடுவார்கள். குஜராத்தின் 6 கோடி மக்களும் எனது குடும்பம். அவர்களின் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சி. அவர்களின் பிரச்னைகள், என் பிரச்னைகள் என்று கூறிய மோடி, குஜராத் தற்போது சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது; வெளிநாடு வாழ் நண்பர்கள் குஜராத்துக்கு வருகை தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பாரத பக்தி மற்றும் ஆன்மிகத்தை இணைத்துப் பேசிய மோடி, சுவாமி விவேகானந்தரின் அருள்கொடையைச் சுட்டிக் காட்டினார். சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை யுவ சக்தி வருடமாகக் கொண்டாடுகிறது குஜராத். அதில் இளைஞர்களின் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சியை முன்வைக்கிறோம். இந்தியா முழுமைக்கும் இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்போது, சிறிய மாநிலமான குஜராத் ரூ.800 கோடியை ஒதுக்கி, இளைஞர் நலன், முன்னேற்றம், ஆளுமை வளர்ச்சிக்கு வழிகோலுகிறது. இந்தியா ஒளிர வேண்டுமானால், இளைஞர்கள் சிறக்க வேண்டும், இளைய சமுதாய இந்தியாவே உலகை வழிநடத்தும். அதன் மூலம் பல மாற்றங்கள் நடைபெறும் என்று குறிப்பிட்ட மோடி, அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இளைஞர்களின் ஆளுமை குறித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டி, சுவாமி விவேகானந்தர் எவ்வாறு இளைஞர்களிடையே வலிமையையும் நம்பிக்கையையும் விதைத்தார் என்பதையும் ஒப்பிட்டுக் காட்டினார்.
1893ல் சிகாகோ சர்வசமய மாநாட்டின்போது, விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி மிகு உரை குறித்து சுட்டிக் காட்டிய மோடி, அதே மாநாட்டில் குஜராத்தின் மைந்தர் வீர் சந்த் காந்தியும் கலந்துகொண்டார்; அந்த மாநாட்டின் பின்னே உலக குருவாக பாரதம் விளங்கும் என்ற கனவு கிளைத்தது, அந்தக் கனவு இப்போது நனவாகும் மாற்றம் நம் கைகளுக்கு வந்துள்ளது என்றார்.
தனது பேச்சின் துவக்கத்தில் மகாசிவராத்திரியான இன்று மக்களுக்கு வாழ்த்து கூறி, சிவபெருமானிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி, அனைத்து தோல்விகளையும் நம்பிக்கையின்மையையும் பின்னோக்கித் தள்ளிவிட்டு, மனதில் நன்னம்பிக்கையை விதைப்பது ஒன்றே என்று கூறினார். விஷத்தை தான் எடுத்துக் கொண்டு உலகுக்கு அமுதத்தை வழங்கிய அவரின் செயலைப் போல் நம் செயல்கள் அமையவேண்டும் என்று வலியுறுத்தினார் நரேந்திர மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக